Magazine Name | Score |
Online Film News | 4 |
எல்லா விதமான படங்களுக்கும் எப்படியாவது சில காட்டுகள் சொல்லலாம். சிலவை விலக்குகள். இந்தப் படம் விலக்கு பெறுகிறது,.
படம் ஓடவேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு அதற்காக கதையைத் தாண்டி பொதுப்படையான சகலங்களையும் கதைக்குள் திணிப்பது. அப்படியும் ஓடவில்லை என்றால் மக்களின் அறிவை சந்தேகப்படுவது இது அணுகுமுறை ஒரு ரகம். அதைவிடுத்து படம் ஓடும் ஓடாது என்பதைத் தாண்டி தான் சொல்லவந்த கருத்தை கர்வத்தோடும் நிறைவோடும் சொல்வது.
முதலில் இந்த வகையான கதையை முழு மனதோடு எந்தவித தலையீடுகளும் இல்லாமல் தயாரிக்க ஒப்புக்கொண்ட விஜய் சேதுபதி அவர்களுக்கு முதல் வணக்கம்.
மழையோடு தொடங்குகிறது.
மழைநீரில் முகம் கழுவி மழைநீர் குடித்த பழைய நினைவுகளை கிளறிவிட்டுச் செல்கிறது துவக்கம். கதைக் களம் கதை மாந்தர்கள் அவர்கள் பேழும் மொழி நடை அவர்கள் உடுத்தியிருக்கும் உடைகள் உழைப்பு நம்பிக்கை போராட்டம் அரசியல் அவலம் அத்தனையும் அருமை. மழையோடு துவங்கிய படம் ஆங்காங்கே சோகம் நம்மை தூறல்மாதிரி நனைத்துக்கொண்டே போகிறது.
இது வழக்கமான படம் இல்லை என்பதால்தன் அத்தனை ஈடுபாட்டோடு பார்க்க வைத்தது. இந்த சமூகத்தையும் உழைக்கும் மக்களின் அடர்த்தியான வலிகளையும் துல்லியமாக கண்ணியத்தோடு பதிவு செய்துள்ளார். இது சராசரி தளத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது. அரசியலையும் பொருளாதாரத்தையும் தவிர்த்துவிட்டு இந்தச் சமூகம் இயங்குவது சாத்தியமற்றது. அதை நுணுக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அவரின் கூர்மையான இடதுசாரி சிந்தனை வரவேற்கத்தக்கது.
சாலையில் பாம்பு போகும்போது அதை தொந்தரவு செய்யாமல் விலகிப்போவதும், ”… அப்படியே வந்தாகூட கையெடுத்து கும்பிட்டுபோ சாமின்னா போயிடுமப்பா” என்று யானையைப் பற்றி ஒரு பெரியவர் சொல்வதும் மலையும் மலையைச் சார்ந்த பகுதி வாழ் மக்களின் வாழ்வியல் அணுகுமுறை
உழைக்கும் மக்களுக்கு குந்தகம் செய்யும் ஒருவன் தன் இயக்கத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டியவன். “ஜீனி போதுமா?” என்று சிரித்த முகத்தோடும் வெட்கம் படர்ந்த மனசுசோடும் நின்று கேட்கும் பாவணையும் இதில் நிரம்பிம் வழியும் அழகியலும் அடடா ….. போதும். அருமை.
வழிநெடுக மக்கள் பேசும் பாமர வட்டாரம் சார்ந்த வழக்குமொழி ரசிக்கவைக்கிறது. உரம் பூச்சி மருந்து கொடுப்பவனின் நம்பிக்கைத் துரோகம், திருமணத்திற்கு பணமாக நிலத்தின் ரொக்கத்தைகொடுத்து உதவி செய்த பாயின் செய்நன்றி அறிதல், மூட்டை தூக்கியின் முதலாளி விசுவாசம் ஏலக்காய் மூட்டையைத் தட்டிவிட்டவனை மன்னித்து, அடுத்த நொடியே சகஜமாக பேசும் ஹீரோவின் நட்பு பாராட்டுதல், ஜீனி போதுமா? என்று கேட்ட நாயகியின் காதல், தான் எடுத்துக்கொண்ட கொள்கைக்கு முற்றிலும் உண்மையாகவும், பொதுவாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணம் செய்துகொண்டும் இருக்கும் கம்யூனிஸ்ட் தோழர்… இப்படி அத்தனையும் உயிர்ப்பான பாத்திர படைப்புகள். இயக்குனர் லெனின் பாரதிக்கு பாராட்டுகள் ~!
இசைஞானி இளையராஜாவின் வியக்க வைக்கும் இசை, தேனி ஈஸ்வரின் ரம்யமான ஒளிப்பதிவு இன்னும் நிறைய பாராட்டலாம்.
திரைப்படம் என்பது உங்களை பொழுதுபோக்க மட்டுமே செய்யவேண்டுமா? அவ்வப்போது ”ஜோக்கர்”, ”மேற்கு தொடர்ச்சி மலை” போன்ற படங்கள் வரட்டுமே அதையும் ஆராதிப்போம்.
தனக்கென்று கொஞ்சம் நிலம் வாங்கி அதில் உழவு செய்து வாழவேண்டும் என்று விரும்பியவனின் வாழ்க்கை அதே நிலத்தில் காவல்காரனாக பணி செய்வதில் முடிவதோடு அல்லாமல் . ”உலகமெங்கும் குறுக்கும் நெடுக்குமாக விரவிக்கிடக்கும் நிலமற்ற உழைக்கும் மக்களுக்கு இத்திரைப்படம் சமர்ப்பணம்” என்று முடிகிறது.
முடிவு வலிக்கிறது.
வாழ்த்துகள்! இதுபோன்ற தரமான அடிநிலை மக்களின் வாழ்க்கையை உயிர்ப்போடு உங்களின் படங்கள் சொல்லட்டும். இதுபோன்ற படைப்புகளுக்குதான் ஆட்கள் இல்லை. அடுத்தடுத்த உங்களின் படைப்புகளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
நன்றி !
ஆசிரியர்,
ஆன்லைன் ஃப்லிம் நியூஸ்.